சிலம்பும் குறளும்
”என்திறம் உரைத்த இமையோர் இளங்கொடி
தன்திறம் உரைத்த தகைசால் நன்மொழி
தெரிவுறதக் கேட்ட திருத்தகு நல்லீர்” - வரந்தரு காதை (185)
“பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின்
தெய்வம் தெளிமின் தெளிந்தோர்ப் பேணுமின்
பொய்யுரை அஞ்சுமின் புறஞ்சொல் போற்றுமின்
ஊனூண் துறமின் உயிர்க்கொலை நீங்குமின்
தானம் செய்மின் தவம்பல தாங்குமின்” - வரந்தரு காதை (190)
“செய்ந்நன்றி கொல்லன்மின் தீநட் பிகழ்மின்
பொய்க்கரி போகன்மின் பொருண்மொழி நீங்கன்மின்
அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்
பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின்
பிறர்மனை அஞ்சுமின் பிழையுயிர் ஓம்புமின்” - வரந்தரு காதை (195)
“அறமனை காமின் அல்லவை கடிமின்
கள்ளும் களவும் காமமும் பொய்யும்
வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்
இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா
உளநாள் வரையாது ஒல்லுவ தொழியாது” - வரந்தரு காதை (200)
“செல்லும் தேஎத்துக் குறுதுணை தேடுமின்
மல்லல்மா ஞாலத்து வாழ்வீர் ஈங்கென்!”
என்று தமது சிலப்பதிகாரத்தை நிறைவு செய்யும் முன் இளங்கோவடிகள் உலகத்தாருக்கு அறவுரை வழங்குகிறார். அவை முழுமையும் சமண கருத்துக்கள் என்பதையாவரும் அறிவீர். ஆனாலும், நாம் கவனிக்காமல் விட்டக் கருத்து ஒன்றிருக்கிறது. அவற்றை ஈண்டுப் பார்ப்போம். மேலே வரும் அறவரிகளை மறுமுறை படியுங்கள். திருக்குறள் அதிகாரங்களை அவைகள் நினைவுப்படுத்துகின்றன அல்லவா?!
இதனால் இளங்கோவடிகள் திருக்குறளைப் படித்திருக்கிறார் என்று
கருதலாமா? படித்திருக்கலாம் என்றுதான் பல அறிஞர்கள்
கருதுகிறார்கள். யான் இக்கருத்தில் சற்றே மாறுபடுகிறேன்.
படித்திருக்கலாம். படிக்காமலும் இருக்கலாம். :-) படிக்காமல்
இருந்தால் அக்கருத்துக்கள் ஒரே மாதிரியாக இருக்கின்றனவே?
எனின், எந்த சமயக் கருத்தையும் எந்த மொழியில் எழுதினாலும்,
அவை எந்த காலக்கட்டத்தில் எழுந்தாலும் அவைகள் ஒரே மாதிரிதான்
இருக்கமுடியும். காட்டாக, அருகனுக்கு “எண்குணன்” என்ற விளி
பண்டைய எல்லா மொழிகளிலும் (அர்தமகதி, கன்னட, சூரசேனி,
சங்கதம்) பயின்று வருவதைக் காணலாம்.
இதனால் மேலே சொன்ன இருபத்தைந்து கருத்துக்களும் எல்லா
சமண மொழி இலக்கியங்களிலும் வருவது கண் கூடு. இவைகள்
மற்ற சமயங்களிலும் வருகின்றனவே என்று கருதுவோர்க்கு, வருதல்
கூடுமெனினும், “Consistence” ஆக, சமணத்தில் மட்டுமே பயின்று
வருகிறது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
இரா.பானுகுமார்,
சென்னை
1 comment:
சிலம்பும் குறளும்' அற்புதமான பதிவு. இதுவரை அறியாத பல தகவல்கள் வாசிக்கக் கிடைத்தன. பகிர்விற்கு நன்றி.
-சித்திரவீதிக்காரன்
Post a Comment